வார்த்தைகள் ஒரு அடையாளம்.
சூழலை, இடத்தை, கலாசாரத்தை,
மரபைக் காட்டும் அடையாளம்.
ஒரே மொழிதான் என்றாலும் வெவ்வேறு வட்டாரங்களின் சொல்
பயன்பாடுகளுக்கு தனித்தன்மை உண்டு. மற்றவர் எளிதில் விளங்க முடியாதது.
’வெளங்கிரும்’ என்று சொன்னால் சட்டென்று பொருள் விளங்கி
விடாது.
கன்யாகுமரி மாவட்டத்தில் இந்த வார்த்தையை சந்திக்க
நேரிடலாம்.
’விளங்கிவிடும்’ என்பதுதான் சற்று நசுங்கி ‘வெளங்கிரும்’ வடிவில் நடமாடிக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது.. வாழ்க்கையில் அடிபட்டு அடிபட்டு சிலதை இழந்து இந்த நிலைக்கு தள்ளப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
பாடம் நடத்துகிற ஆசிரியர் ‘விளங்கிச்சா’ என்று கேட்டால் ‘புரிந்ததா’ என்று கேட்கிறார் என்று புரிந்து கொள்ளலாம். ‘வெளங்கிரும்’ என்று சொன்னால் அதன் அர்த்தம் ‘புரிந்துவிடும்’ என்று புரிந்து கொள்ள தோன்றினாலும் அதன் பொருள்
அதுவல்ல.
மேன்மையடையும், உருப்பட்டுவிடும்,சிறந்து விளங்கும் என்றும்
அர்த்தப்படுத்திக் கொள்ளலாம். ஆனால் தொனி அதுவல்ல. வஞ்சப்புகழ்சி குடும்பம். எதிர்
கட்சி இருக்கை. நல்லவன் வேடத்தில் இருக்கும் கெட்டவன்.
’நாசமா போயிரும்’ என்பதான வாழ்த்துக்கு இணையானச் சொல். நக்கல் தொனி.
அப்பனுக்கு எதிரே மகன் ’தண்ணி’யடித்தால்‘வெளங்குவியா?’
அந்த மகனிடமே வாங்கி அப்பன் அடித்தால்..’வெளங்கிரும்’.


