நாகர்கோயில் - திருவனந்தபுரம் தெசிய நெடுஞ்சாலையில் எங்கள் ஊர் பகுதியில் விபத்துகள் தினசரி வழக்கங்களாகி விட்டன.
சாலையை கடக்கவே முடியாத வாகனப் பெருக்கம்.
எப்பொழுதும் ஒரு துயரம் அந்த சாலையில் காட்சிக்குப் படுகிறது.ஏதோ ஒரு துர்தேவதை சாலையின் நடுவே படுத்து கிடப்பது போலவும்,விபத்துகளை துரிதமாய் நடத்திக் கொண்டிருப்பது போலவும் தோன்றுகிறது.
விபத்துகளுக்கு காரணம் வேகமா... வாகன நெருக்கடியா... அகலப்படுத்தாத சாலையா...
மிகவும் கவனமுடன் செல்வதாக நினைத்து ஓரமாய் சென்றாலும் பின்னால் வருகிற லாறி அடித்து போட்டு விட்டு சென்று விடுகிறது.
நேற்றைய நிகழ்வு அப்படிதான்.ஓய்வு பெற்ற பேராசிரியர் அவர்.வலதுபக்க சாலைக்கு திரும்புவதற்காக,இடது ஓரமாய் சாலையை விட்டிறங்கி, வண்டியை நிறுத்தி பின்னால் எந்த வாகனமாவது குறுக்கிடுகிறதா என்று முன்னெச்சரிக்கையாய் கவனித்தார். ஆனால் அவர் துரதிஷ்டம் பின்னால் வண்டி வரவில்லை. முன்பக்கமாய் ஓவர்டேக் செய்த டெம்போ இவரை மோதி இழுத்துக் கொண்டு போனது.
இத்தனை எச்சரிக்கையாய் நடந்து கொண்ட போதிலும் அடுத்தவனின் அஜாக்கிரதையே நம்மை பலி வாங்கி விடுகிறதே. தப்பு செய்யாதவனை தண்டித்த மாதிரி இது என்ன கொடுமை. சொல்லி வைத்த மாதிரி அந்த சாலையிலேயே விபத்து சிகிட்சை பிரிவுகளைக் கொண்ட எலும்பு முறிவு மருத்துவமனைகள்... வரிசையாய்... உயரமாய்...
பக்கத்து வயல்வெளிகளை வாங்கி கட்டிடங்களாய் கட்டி கால் ஒடிந்தவனை படுக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
செல்போனை கழுத்துக்கும் காதுக்கும் இடையே கொடுத்துக் கொண்டு கவனம் சிதறி கனவனும் மனைவியுமாக இன்று லாரிக்கிடையில் நசுங்கிக் கிடந்ததை கான சகிக்கவில்லை. வீட்டில் ஆறு வயதுக்கு மிகாத இரண்டு குழந்தைகளுக்குப் பெற்றோராம்.வீட்டில் தேடிக் கொண்டிருக்கிற குழந்தைகள் ஒரு கணம் நினைவில் வந்து போனார்கள்.
இவற்றை விட பெரிய அதிர்ச்சி...
...... விபத்து நடந்த பகுதியில் சட்டென்று உருவாகி விடுகிற போக்குவரத்து நெரிசல்.அவசரமாக போகத்துடிக்கிற மனிதர்கள். பணி,பள்ளி,மீட்டிங்,ஆஸ்பத்திரி என்று அவரவர்களுக்கு ஒரு அவசரம்.எப்போ டிராபிக் கிளியராகும் என் வேலையை நான் பார்க்க ஓடிவிடவேண்டும் என்று துடிக்கிற.. எரிச்சல்.
இன்னொருபுறம் துளியாய் விழுந்து நிறையும் நீர் போல சிறு கூட்டம்.சிலர் மௌன சாட்சிகளாய்.. சிலர் பரபரப்பு செய்தி சேகரிப்பவர்களாய்.. வெகு சிலரே, ‘தூக்கு,ஆட்டோ பிடி,ஆஸ்பத்திரி போ.’ என்று பதறியடித்து உயிர் காக்கும் துடிப்புடன்..
அதே நேரம் மோதிய பெரிய வண்டியின் டிரைவரை நையப்புடைக்கும் ஒரு பாரம்பரியமும் காணமுடிகிறது. மனித தவறே இல்லையாயினும் இந்த மனித தண்டனைகள் நிறைவேற்றப்படுவது அவசியம் என்கிற நிலையே நீடிக்கிறது.
விபத்துகளில் பெரிய வேதனை இன்னொன்றும் இருக்கிறது.அடிபட்டவர் உடம்பில் எங்கோ ஒரு மூலையில் உயிர் மட்டும் ஒட்டிக் கொண்டிருக்கும்.ஆனால் நினைவு இருக்காது. உடல் மனம் எல்லாம் ஒடிந்து கிடக்கும். எப்போது நினைவு வரும் அல்லது எப்போது மரணம் வரும் என்று தீர்மானிக்க இயலாத துரதிஷ்டம் நேர்ந்துவிடும். யாருக்கும் விடிவு தராத அந்த சூழ்நிலை எத்தனை கொடுமை.லட்சங்கள் கரையும்.விமோசனம் இல்லை என்று தெரிந்தும் மருத்துவம் பார்க்காதிருக்க முடியுமா?கற்பனை பண்ணி பார்க்க முடியாத இந்த நிலையை பலர் அனுபவித்துக் கொண்டிருப்பதுதான் கொடுமையான நிஜம்,
சரி எல்லா பாதைகளையும் ஒருவழிப் பாதையாக்கிவிட்டால் என்ன? அப்போதும் விதி மீறல்கள் எழாதா. விபத்தே நடக்காதா? உத்தரவாதமில்லை.வாகன ஓட்டிகளுக்கு பொறுப்பைவிட, ஓய்வை விட,வேகமும் முக்கியமாய் எதிர்பார்க்கப் படுகிற விசயமாகி விட்டது.
அரசு பேருந்தை சராசரி வேகத்தில் ஓட்டிச் செல்கிற ஒரு டிரைவரைப் பார்த்து பயணிகள் சலித்துக் கொள்கிற காட்சிகளை அடிக்கடி பார்க்க முடிகிறது.
“செத்தவன் கையில வெத்தலய கொடுத்த மாதிரி இவனுக்கு எவன் வேலை குடுத்தான்.”
“மாட்டு வண்டி ஓட்டறவனை பஸ்க்கு டிரைவரா வச்சா இப்படிதான்”
கேட்கிறோம்தானே.
இன்னொன்று, இரவில் வாகனம் ஓட்டுவது.எதிரே வரும் ஓட்டுனருக்கு கண்ணுக்கெதிரேதான் வெளிச்சம் அடிக்கிறார்கள். எதிர் ஓட்டுனர் சாலையோரம் மூடப்படாத பள்ளத்தை இந்த வெளிச்சத்தில் எங்ஙனம் காண்பார்....
ஒருமழை அடித்தால் போதும் ஊதி வெடித்து குண்டும் குழியுமாகும் சாலைகள்... நடைபாதை விட்டிறங்கி சாலையில் நடக்கும் பாதசாரிகள்...
யோசனை மண்டையை பிளக்க இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தேன். அதிகம் போக்குவரத்து இல்லாத கிராமத்து சாலை. இருபக்கமும் வயல்கள்; புதர்கள்.
ஒரு திருப்பத்தில் சட்டென்று கறுப்பு கார்.. அதுவும் வேகம். சுதாரிப்பதற்குள்
அது நடந்தே விட்டது..
‘ட்டங்’ என்று ஒரு சத்தம்.வண்டி ஒரு பக்கம் நான் ஒரு பக்கம்.விரலில், முழங்கையில், கணுக்காலில் சிவப்பு திரவம். கார்காரன் கத்தினான். ‘டர்னிங்ல ஆரன் அடிசிட்டு வர மாட்டியா. இப்படி தலைதெறிக்க மாதிரி வார.’