அலுவலகத்துக்கு புறப்படுவதற்காக வீட்டுக் கதவைப் பூட்டிக் கொண்டு வெளிவரும்போதுதான் எதிர் வீட்டிலிருந்து அந்த குரல் கேட்டது.
“மாமா... மாமா... டாட்டா” டாட்டா என்பது தாத்தா என்பதாகக் கேட்டது. மழலை மொழியில்,குறுகுறு சிரிப்புடன் அந்த குழந்தை,கேட்டில் ஏறி குதித்துக் கொண்டிருந்தது.
குழந்தை என்றாலே கொள்ளை பிரியம் எனக்கு.அதிலும் அறிமுகமில்லாமலே சிரிக்கிற குழந்தையிடம் ஈர்ப்பு இன்னும் அதிகம்.தமிழ் தெருவில் குழந்தைகளே என் அபிமான நண்பர்கள்.அவர்களோடு உரையாடுதலே பிடித்தமான பொழுதுபோக்கு.விழாக்களில், நிகழ்ச்சிகளில் குழந்தைகளை தேடிப்பிடித்து பரிச்சயம் செய்து கொள்வதில் அலாதி பிரியம்.
விடுமுறை நாட்களில் என் நண்பர்கள் எல்லோரும் விளையாட வந்து விடுவார்கள்.ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இயல்பாய் இருக்கும் குழந்தையை அவ்வேளையில் என்னைப் பார்த்து புரிந்து கொள்ளலாம்.
நண்பர்களில் ஒருவரைக் கொஞ்சினால் மற்றவருக்கு கோபம் வரும்.உதட்டை பிதுக்கிக் கொண்டு, ஓரமாய் உட்கார்ந்து, தலை கவிழ்த்து, கண்ணை மட்டும் அடிக்கடி உயர்த்தி நம்மை பார்த்துக் கொண்டு, நாம் பார்த்தால் தலையை வெட்டிக்கொண்டு செல்லச் சிணுங்கலுடன்.. ... அட..அட..அட.. உடனே அவரைத் தூக்கி ‘என் செல்லமே’ என்று கொஞ்சாத வாழ்க்கையே பாழ்.
எதிர் வீட்டுக் குழந்தை ‘மாமா’ என்ற போதும் அப்படி ஒரு உணர்வுதான் தோன்றியது.
இதற்கு முன் அந்த குழந்தையை பார்த்ததில்லை.எதிர் வீட்டுக்கு விருந்தினர்களாக வந்திருக்க வேண்டும். உணவு ஊட்டும் தாய்க்கு போக்கு காட்டிக் கொண்டு ‘கிரில் கேட்’டில் தொங்கிக் கொண்டிருந்தான்.வெற்றுடம்பில் ஜட்டி மட்டும் போட்டிருந்தான்.கம்பி வளைவுகளுக்குள் காலூன்றி,வலக்கையால் மேல் கம்பியில் தொங்கி,மறு கை அசைத்து,வாயில் உணவு மிச்சங்களோடு ஈஈஈஈ... என்று புன்னகைத்ததில் என் மனசு குளிர்ந்து போயிற்று.
பதிலுக்கு நானும் கையசைத்ததில் குதித்து துள்ளிக் கொண்டே ஓடினான். அவன் தாய் பின்னாலேயே துரத்தினாள்.”ஓடாதடா செல்லம்.. கீழே விழுந்துடுவேடா”
அவன் தாயைப் பார்த்து கைகொட்டினான். “என்ன பிதிக்க முதியாதே” என்றான்.
மனசே இல்லாமல் கிளம்பி போனேன்.
இந்த வயதில் ஒரு நட்பை உருவாக்கிக் கொள்ள அவனுக்கு சுலபமாய் முடிகிறது. சந்தோசிக்க அவனுக்கு காரணமே வேண்டியிருக்கவில்லை.
சிறுவயதில் என் மகன் கேட்டது நினைவிருக்கிறது. “அப்பா மண் புழு என்ன சாப்பிடும். எப்படி சாப்பிடும். அதுக்கு தலை எந்தபக்கம் வால் எந்தபக்கம்” அடுக்கடுக்காய் கேள்விகள்.
பார்த்தவை தொடர்பாய் இப்படி யோசிக்கத் தோன்றியிருக்கிறது அந்த வயதில். அற்ப புழுதானே என்று நாம் யோசிக்காமல் விட்ட விசயங்கள் அவர்கள் கற்றுக் கொள்ளும் பாடமாயிருக்கிறது. மண் புழு பற்றி நான் தேடிப் பிடித்து தெரிந்து கொள்ள முயன்றது அதன் பிறகுதான்.
இப்படி நாம் விடைகளையே தேடிக்கொண்டிருக்க..... அவர்கள் அடுத்த கேள்விக்கு போய் விடுகிறார்கள்.அவர்கள் கேள்வியில்தால் விடைகள் விடுபட்டு வெளியே வருகின்றன.ஞானம் உடைபட்டு நறுமணமாய் எங்கும் பரவுகிறது.
மாலை அலுவல் முடிந்து வீடு வந்த போது தெரு பரபரப்பாயிருந்தது. கவலை தோய்ந்த முகங்களால் தெரு நிரம்பியிருந்தது. எதிர் வீட்டில் ஒரே கதறல் சத்தம்.பதட்டத்துடன் விசாரித்ததில் கிடைத்த தகவல் என்னை நொறுக்கிப் போட்டது. நிலைகுலைந்து போனேன்.அப்படியே பக்கத்து வீட்டு படியில் உட்கார்ந்து விட்டேன்.
திருமண நிகழ்ச்சிக்கு போய் விட்டு காரில் வரும்போது விபத்தில் சிக்கியதாம் எதிவீட்டு குடும்பம். மற்றவர்கள் காயங்களோடு தப்பிக் கொள்ள, முன் இருக்கையில் கும்மாளமிட்டுக் கொண்டிருந்த அந்த குழந்தை... அந்த குழந்தை மட்டும்.... உயிரிழந்த செய்தி கலங்கடித்துவிட்டது. நெஞ்சு பாரமாயிற்று.
காலையில் மான்குட்டி போல துள்ளிக் குதித்துக் கொண்டிருந்த குழந்தை மாலையில் பேச்சு மூச்சற்று கிடப்பதைப் பார்க்க சகிக்க முடிய வில்லை. ‘என்னை பிதிக்க முதியாதே’ என்று அப்போது சொன்ன வார்த்தைகள் இப்போதும் காதில் ஒலிப்பது போல்......
நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு இரை தேடி அலையும் மரணத்திற்கு குழந்தைகள்தான் அகப்பட்டதா? இப்படி குதறி எடுத்து விட்டதே!.
இம்மாதிரி நேரங்களில்தானே நமக்கு கேட்கத் தோன்றுகிறது. மரணமே உன் மரணம் எப்பொது நிகழும்?
“மாமா... மாமா... டாட்டா” டாட்டா என்பது தாத்தா என்பதாகக் கேட்டது. மழலை மொழியில்,குறுகுறு சிரிப்புடன் அந்த குழந்தை,கேட்டில் ஏறி குதித்துக் கொண்டிருந்தது.
குழந்தை என்றாலே கொள்ளை பிரியம் எனக்கு.அதிலும் அறிமுகமில்லாமலே சிரிக்கிற குழந்தையிடம் ஈர்ப்பு இன்னும் அதிகம்.தமிழ் தெருவில் குழந்தைகளே என் அபிமான நண்பர்கள்.அவர்களோடு உரையாடுதலே பிடித்தமான பொழுதுபோக்கு.விழாக்களில், நிகழ்ச்சிகளில் குழந்தைகளை தேடிப்பிடித்து பரிச்சயம் செய்து கொள்வதில் அலாதி பிரியம்.
விடுமுறை நாட்களில் என் நண்பர்கள் எல்லோரும் விளையாட வந்து விடுவார்கள்.ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இயல்பாய் இருக்கும் குழந்தையை அவ்வேளையில் என்னைப் பார்த்து புரிந்து கொள்ளலாம்.
நண்பர்களில் ஒருவரைக் கொஞ்சினால் மற்றவருக்கு கோபம் வரும்.உதட்டை பிதுக்கிக் கொண்டு, ஓரமாய் உட்கார்ந்து, தலை கவிழ்த்து, கண்ணை மட்டும் அடிக்கடி உயர்த்தி நம்மை பார்த்துக் கொண்டு, நாம் பார்த்தால் தலையை வெட்டிக்கொண்டு செல்லச் சிணுங்கலுடன்.. ... அட..அட..அட.. உடனே அவரைத் தூக்கி ‘என் செல்லமே’ என்று கொஞ்சாத வாழ்க்கையே பாழ்.
எதிர் வீட்டுக் குழந்தை ‘மாமா’ என்ற போதும் அப்படி ஒரு உணர்வுதான் தோன்றியது.
இதற்கு முன் அந்த குழந்தையை பார்த்ததில்லை.எதிர் வீட்டுக்கு விருந்தினர்களாக வந்திருக்க வேண்டும். உணவு ஊட்டும் தாய்க்கு போக்கு காட்டிக் கொண்டு ‘கிரில் கேட்’டில் தொங்கிக் கொண்டிருந்தான்.வெற்றுடம்பில் ஜட்டி மட்டும் போட்டிருந்தான்.கம்பி வளைவுகளுக்குள் காலூன்றி,வலக்கையால் மேல் கம்பியில் தொங்கி,மறு கை அசைத்து,வாயில் உணவு மிச்சங்களோடு ஈஈஈஈ... என்று புன்னகைத்ததில் என் மனசு குளிர்ந்து போயிற்று.
பதிலுக்கு நானும் கையசைத்ததில் குதித்து துள்ளிக் கொண்டே ஓடினான். அவன் தாய் பின்னாலேயே துரத்தினாள்.”ஓடாதடா செல்லம்.. கீழே விழுந்துடுவேடா”
அவன் தாயைப் பார்த்து கைகொட்டினான். “என்ன பிதிக்க முதியாதே” என்றான்.
மனசே இல்லாமல் கிளம்பி போனேன்.
இந்த வயதில் ஒரு நட்பை உருவாக்கிக் கொள்ள அவனுக்கு சுலபமாய் முடிகிறது. சந்தோசிக்க அவனுக்கு காரணமே வேண்டியிருக்கவில்லை.
சிறுவயதில் என் மகன் கேட்டது நினைவிருக்கிறது. “அப்பா மண் புழு என்ன சாப்பிடும். எப்படி சாப்பிடும். அதுக்கு தலை எந்தபக்கம் வால் எந்தபக்கம்” அடுக்கடுக்காய் கேள்விகள்.
பார்த்தவை தொடர்பாய் இப்படி யோசிக்கத் தோன்றியிருக்கிறது அந்த வயதில். அற்ப புழுதானே என்று நாம் யோசிக்காமல் விட்ட விசயங்கள் அவர்கள் கற்றுக் கொள்ளும் பாடமாயிருக்கிறது. மண் புழு பற்றி நான் தேடிப் பிடித்து தெரிந்து கொள்ள முயன்றது அதன் பிறகுதான்.
இப்படி நாம் விடைகளையே தேடிக்கொண்டிருக்க..... அவர்கள் அடுத்த கேள்விக்கு போய் விடுகிறார்கள்.அவர்கள் கேள்வியில்தால் விடைகள் விடுபட்டு வெளியே வருகின்றன.ஞானம் உடைபட்டு நறுமணமாய் எங்கும் பரவுகிறது.
மாலை அலுவல் முடிந்து வீடு வந்த போது தெரு பரபரப்பாயிருந்தது. கவலை தோய்ந்த முகங்களால் தெரு நிரம்பியிருந்தது. எதிர் வீட்டில் ஒரே கதறல் சத்தம்.பதட்டத்துடன் விசாரித்ததில் கிடைத்த தகவல் என்னை நொறுக்கிப் போட்டது. நிலைகுலைந்து போனேன்.அப்படியே பக்கத்து வீட்டு படியில் உட்கார்ந்து விட்டேன்.
திருமண நிகழ்ச்சிக்கு போய் விட்டு காரில் வரும்போது விபத்தில் சிக்கியதாம் எதிவீட்டு குடும்பம். மற்றவர்கள் காயங்களோடு தப்பிக் கொள்ள, முன் இருக்கையில் கும்மாளமிட்டுக் கொண்டிருந்த அந்த குழந்தை... அந்த குழந்தை மட்டும்.... உயிரிழந்த செய்தி கலங்கடித்துவிட்டது. நெஞ்சு பாரமாயிற்று.
காலையில் மான்குட்டி போல துள்ளிக் குதித்துக் கொண்டிருந்த குழந்தை மாலையில் பேச்சு மூச்சற்று கிடப்பதைப் பார்க்க சகிக்க முடிய வில்லை. ‘என்னை பிதிக்க முதியாதே’ என்று அப்போது சொன்ன வார்த்தைகள் இப்போதும் காதில் ஒலிப்பது போல்......
நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு இரை தேடி அலையும் மரணத்திற்கு குழந்தைகள்தான் அகப்பட்டதா? இப்படி குதறி எடுத்து விட்டதே!.
இம்மாதிரி நேரங்களில்தானே நமக்கு கேட்கத் தோன்றுகிறது. மரணமே உன் மரணம் எப்பொது நிகழும்?
